Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Monday, September 3, 2012

alaigal - oru kavidai

கரைவரும் அலைகளே, கலங்கி நிற்பதேனோ ?
கரைவந்த எந்தன் கால்களை
கட்டி அணைத்த போதும், மெதுவாய்
கிச்சுகிச்சு மூட்டிய போதும்,
தெளியாது தவித்தேன்
கவலை உன்னுடைய தென்னென்று?
முகவரி மறந்து வந்தாயோ?
முகங்கள் தேடி நின்றாயோ?

உன் நீல உடல் உமிழும்
வெள்ளை வியர்வை நுரையில்
ஒளிந்துள்ள கொள்ளைக் காதல்
இன்னதெனப் புரியவில்லையே !

வானோர் தம் செவியில் உன்
ஈனச்சுரம் விழவில்லையோ !
இறைவா,
உன்னவள் மடியில்புழுவென இழையும்
அலைகளின் குறைகள் நீ அறிகிலையோ !
ஒருக்கால்,
விழ விழ, தளராது எழும்
அலைகளின் பண்பை, உலகம் உணர
இறையும் செவிடன் ஆனானோ?

Monday, August 6, 2012

விதவை

விதையாய் விழுந்து,
மண்ணில் வேரூன்றி
தளிர்த்து
மலர்ந்து
காய்த்து
கனியும் முன்பு
கொய்தெறிந்த கொடுமை

Tuesday, July 24, 2012

குழந்தையின் புன்னகை

குழந்தையின் புன்னகை

கற்று சிறந்தோறும், கல்லா சிறியோரும்
பண்பில் பழுதோறும் பண்பற்ற மூடரும்
கள்ளமில் குழந்தாய்
நுண் குறுமுகம் நிறைந்து
மென்மையினும் மென்மை அதரம் விரித்து
ஒற்றைப் பல்லுடைப் பொக்கை வாயில்
ஒட்டியிருக்கும் மழலை புன்னகை காணின்
நா தீண்டிய சர்க்கரை பாகாய் உள்ளம் நெகிழ்வாரே
இறைவா வேண்டுமே கண்டிப்பாய் இன்னும் ஒரு பிறவி
உன்னினும் இனிய குளவி பருவம் வேண்டி

Saturday, September 17, 2011

அன்னை

சிப்பிக்குள் முத்தாகிப்  , புளியிட்ட  செப்பாகி,
மண்ணுக்குள் பொன்னாகி, மண்ணிலே பெண்ணாகிப்  பிறந்து,
எனை வளர்க்க உனை கரைத்து,
தியாகியாகி, எந்தன் ஆசானாகி,
அன்பாகிப்  , பண்பாகிப்  , பிறர் போற்றும் ஒளி விளக்காகி
நல்வழி காட்டும் ஒளியாகி
உடையவனுக் குடனாகி, ஈன்றவன் தாயாகி,
கற்பிர்க்கு அணியாகி, ஒப்பிலா மணியாகிச்  சிறந்த நுன்,
தாளணியாகி, அதிலும் தூளாகி வந்த மண்னும்,
 என்  நெற்றி திலகமாகி திகழாதோ !
என் எல்லாப் பிறப்பிலும்
உன் வயிற்று சுமையாகி
மகனாகிப் பிறக்கும் பேறை
எனக்கு அவ்வொப்பிலா இறைவன் அருள மாட்டானா?

அழகு

தமிழை அழகு என்றோம்
தமிழ் தந்த கடவுள்,
முருகனை அழகு என்றோம்
அன்பே,
நீ அழகு என்றதால்
உன்னை தமிழ் என்றேன் நான்

நீ என்னை காதலித்தால்

உலகில் பிறந்த சந்தனம் எல்லாம்
ஒன்றாய் இழைத்து ஆண்டவன்
உன்னை படைத்தானோ 
ஆயிரம் சிப்பிகள் மது உண்டு முத்து உமிழினும்
இணை ஆகுமோ உன் மல்லிகை மொட்டு பற்க்ளுக்கு

பொன் வேண்டி ஏன் மண்ணை தொண்டுகிறார்
புவியின் பொன் அனைத்தும், சிலையாய், பெண்ணாய்
உன் வடிவில் நிற்கிறதே

இறைவனின் மல்லிகை தோட்டத்தில்
விளைந்த விண்மீன்கள் யாவையும்
உன் வட்ட விழிக்குள் வைத்தாயோ?

உன் சுவாசத்தை சுவாசித்த பின்
மூச்சு விட மனசு இல்லையே

விடியலில்,
கமலங்கள் மலர்வதும், பறவைகள் பறப்பதும்
கதிரோன் கண்டு என்றல்லவா நினைத்தேன்
உன்னை கண்டபின் உணர்ந்தேன்
அவை யாவும், நீ துயில் எழும் அழகைக்  காண என்று !

இயம்ப இயலா அழகை கண்டு
இயற்கை என வியந்தோம்,
அந்த இயற்கையும் வியக்கும் நுன்னை என்னென்று விளம்ப...

தித்திக்கும் மலை தேனே, திகட்டாத அமுதே,
இப்படி எல்லாம் உன்னை
சத்தியமாய் கவிதை பாடுவேன்,
நீ மட்டும் என்னை காதலித்தால்

இழப்பு

மாலை முல்லை மலரும் வேளை,
காலை கதிரவன் மறையும் வேளை,
கதிரவன் கண்ட கமலம் போல்
என் உதிரம் கலந்த நாயகி நினைவுகள்,
சோலை மலர் நடுவில் மலர்கையில்,
பாலை பறவை போல் தவிக்கும் என் உள்ளது
நாயகி, என்னை மறந்து,
பள்ளம் மேடு கடந்து கொண்டவனோடு
வீதியில் உலா வருவது கண்டேன்
வெண் துகிலில் இட்ட கரும்புள்ளி போல்
என் வாழ்வில் வந்தவளை மறந்து,
புதிய வாழ்வு தொடர,
மற்றொரு நாயகி, என்னுள்ளம் ஏறினாள்,
அவளும் மண்ணில் சிந்திய நீர் போல்,
என்னை பிரிந்து செல்ல,
இவ்வுலகத்துடன் பிரியா உறவுடை
இயற்கை பெண்ணை காதலித்தேன்,
வாழ்வின் வஞ்சனையோ,
நிலையிலா இன்பம் வேண்டி, மனிதன்
அவளையும் அழிக்க துவங்கி விட்டான்,

இழப்பு என்பது எனக்கு மட்டும்
என் அகராதியின் எல்லா பக்கததையும் அலங்கரிக்கிறதோ?

இறைவன் எங்கே

அறிவியலும் இறைமையும் ,
அறியாமையால் அறியாத பேதை நான்,
அன்னை மடி பிறந்து
முலையமுது உண்ட  அனைத்து உயிர்க்கும்
முதலில் தோன்றி, இடையில் மறந்து,
முடிவில் மறையும் நிரந்தர கேள்வி,
"இறைவன் யார், எங்கு இருக்கிறான்?"
என் மதியிலும் துளிர்த்ததை
மெதுவாய்க் கேட்டேன், சான்றோர் ஒருவரிடம் !

கதிரவன் அறிவும், மதியின் சாந்தும் கொண்டு,
பசுமை வெற்றிலையாய்ப் பளிச்சித்ட அவர் முகம்,
பாக்கொடு பல்லிடை அரைத்த
வெற்றிலையாய்ச் சிவந்து, பின் சினந்து கூறினார்,
"மூடனே, இறைவன் எங்கும் உள்ளார்"

பாவம் !
அவர்  என்னுள்ளும் உள்ள
இறைவனைக் காண மறந்தார் போலும் !

ஹைக்கூ

விண்மீன்கள்



இறைவனின் குழந்தை அளைந்து எறிந்த சோற்று பருக்கை  !!



காலை பறவை வேண்டி வானத்து தேவதை தூவிய தானியம் !!

Sunday, February 20, 2011

குழந்தை தொழிலாளி

உலகம் எங்கும் தீபாவளி, விண் எங்கும் வண்ணங்கள்,
மத்தாப்புக்கள், சர வெடிகள் , தரை சக்கரம் என
புதிதாக பல வகை வெடிகள்
அதிசயமாய்ப் பார்த்தாள், ஐந்து வயது அஞ்சலை,
அமைதியாய் அண்ணாந்து பார்த்து
பெருமையாய் அம்மாவிடம் கூறினாள்,
"அம்மா இதெல்லாம் நான் தான் செய்தேன்".........

ஒரு முறை நீயும் வாராய்

கண்ணா, நீயும் மறுபடி வாராய்
வந்தென் ஐயம் ஒரு முறை கேளாய்,
என்ன பார்க்கிறாய்?
சட்டை பை முதல் சாக்கு பை அளவிற்கு வித விதமாய்,
கீதை என்ற ஒரே புத்தகத்தை எழுதிய கில்லாடி,
உன்னை தான் ! !

எந்தன் அன்னை,
அவளுடை அழகிய உடலை வருததி
எங்கோ சுழலும் கிரகங்கள் எண்ணி,
திங்கட் தோறும் நோன்பிருந்து,
நாள் முழுதும் உன் புகழ் பாடி,
என்றோ நீ திருடி தின்ற வெண்ணை குறித்து
இன்றும் அளவளாவி மகிழ்ந்தனள்.
அன்று நீ உடைத்த கலயம் பற்றி கவலைப்படவில்லை,
வீணான வெண்ணை எண்ணி வருந்தவுமில்லை

எனின்,
எவருக்கும் துன்பம் தராமல்,
யாருக்கும் தெரியாமல் ஒருமுறை
ஒரே ஒருமுறை அப்பா பையிருந்து
மிட்டாய் வாங்க எடுத்த ஐம்பது காசிற்கு,
உடல் சிவக்க நையப் புடைத்து
உன் முன் மன்னிப்பு கேட்க சொன்னார் !
நான் செய்தால் பாவம்,
நீ செய்தால் லீலையா?
ஒரு வேளை, நீ திருடர்களுக்கெல்லாம் அரசனா?
அதனால் தான் நீ செய்த பிழைகளும் போற்றபபடுகிறதா?
சுயநலம் வேண்டி நியாயத்தை வளைக்க
நீ என்ன ஜாதி கட்சி தலைவரா?
இல்லை, இந்திய அமைச்சரா?
ஐந்தலை பாப்பின் மடியில்
சுகமாய் உறங்கியது போதும்,
ஒரு முறை நீ ஓடி வாராய்....
நியாயம் வேண்டி நீதி போதித்த
ஆசானிடம் மெதுவாய் குறை கூறினேன் !
சிறுவன் என்றும் பாராமல்,
சுருக்கென்று பிரம்பால் புடைத்தார்

உன் அன்னை யசோதாவோ
உன் மலர் மேனி போர்த்திய தோல் துப்பும்
வியர்வைக்கும் வலிக்காமல் அடிப்பார்,
என்னுடை பிரம்படி எப்படித் தெரியுமா?
பாலில் கலந்த சர்க்கரை, முழுதும் கரைந்து, பின் எஞ்சியது
அடியில் தங்குவது போல்,
தொடையில் விழுந்த அடியின் வலி,
உடல் முழுதும் படர்ந்து , பின்
குருதி செல் நரம்பும் தசையும் தாண்டி,
என்பு வரை வலிக்கும் !

ஞாயிறுதோறும் "மகாபாரதம்" நாடகத்தில்
வைகுண்டதில் படுத்து சிரிப்பது பார்த்தேன்,
ஒரு முறை பிரம்படி வாங்கினால் புரியும் ,
உன் வைகுண்ட புன்னகை எல்லாம்,
அரசியல் வாக்குறுதிகள் போல் காற்றில் பலந்து காணாமல் போய் விடும்,
எனக்கு வேண்டி, செல்ல கண்ணா
ஒருமுறை பூமிக்கு வாராய்,

ஆனால், நான் புத்திசாலி,
நீ என்ன சொல்வாய் என்று எனக்கு தெரியும்,
" நண்பா, குமுறாதே , சற்று பொறு,
அடுத்த யுகத்தில், உன்னையும் கடவுளாக்கி
உன் ஐம்பது காசு திருட்டு குறித்து
வேறொரு அன்னை விரதம் இருப்பாள்"
ஹா ஹா ஹா

Saturday, February 12, 2011

அன்பே !
உள்ளொன்று புறமொன்று இருந்தால்
வஞ்சன் என்பார்கள்,
நானும் அப்படி தான்
உள்ளே நீ.
வெளியே நான்